அதிக பெறுமதியான போதைப் பொருட்களுடன் கல்முனையில் இருவர் கைது (Video)
30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள், கல்முனை நகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து வெள்ளிக்கிழமை(16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பகுதியில் இருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதுடன் 36 வயது மற்றும் 49 வயது கல்முனை மற்றும் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.
குறித்த போதைப்பொருட்கள் பொலித்தீன் பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ள நிலையில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் அம்பாறை மாவட்ட வரலாற்றில் மீட்கப்பட்ட பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பாறுக் ஷிஹான்