மோடி – மேக்ரான் முன்னிலையில் இந்தியா–பிரான்ஸ் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் உடன் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களை வரவேற்றனர். மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் அதிபர் மேக்ரான் தங்கினார்.
பிரான்ஸ் அதிபரை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து மும்பை சென்றார். மும்பை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இந்தியா–பிரான்ஸ் உறவை “சிறப்பு சர்வதேச ராஜ்ஜிய கூட்டுறவு” என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது, 2026ஆம் ஆண்டை இந்தியா–பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு ஆண்டாக அறிவிப்பது, புதுமை கண்டுபிடிப்பு கூட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இடம்பெற்றுள்ளன.
இதனுடன், இந்தியாவின் டாடா குழுமம் மற்றும் பிரான்ஸின் ஏர்பஸ் இணைந்து கர்நாடகாவின் வேமகள் பகுதியில் அமைத்துள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் எச்125 ரக ஹெலிகாப்டரை பிரதமர் மோடியும் அதிபர் மேக்ரானும் காணொலி மூலம் அறிமுகம் செய்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா–பிரான்ஸ் உறவு எல்லைகளைக் கடந்த நட்புறவாக வளர்ந்து வருவதாகவும், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியா–பிரான்ஸ் நட்பு கடலைவிட ஆழமானதும், மலையைவிட உயரமானதும் என அவர் கூறினார்.
அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசுகையில், இந்தியா–பிரான்ஸ் உறவு தனித்துவமானது என்றும், அதை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இந்திய–பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம், தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற துறைகளில் கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். ரஃபேல் போர் விமானங்கள் முதல் நீர்மூழ்கிகள் வரை பாதுகாப்புத் துறையில் உறவு விரிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, பிரான்ஸிடமிருந்து ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் புதிய தலைமுறை ரஃபேல் எப்4 மற்றும் சூப்பர் ரஃபேல் ரக விமானங்களும் இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பான இறுதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.