டெலிகிராம் செயலிக்கு இந்தியா முழுவதும் தற்காலிகத் தடை
மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வான நீட், ஏறத்தாழ 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இத்தேர்வுக்கு முன்னரே ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்து விற்பனை செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்துப் பலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இதையடுத்து, வரும் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவுள்ளது.
வினாத்தாள்கள் மீண்டும் கசிவதைத் தடுக்கும் வகையில், இம்முறை மத்திய அரசு பல அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் இணைய வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நீட் மறுதேர்வு வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலி மூலம் பரவியதே இத்தடைக்கு முக்கியக் காரணமாகும். மறுதேர்வு முடியும் வரை இத்தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.