உதயநிதி + மிதுன்.. விஜய்க்கு குழி பறிக்க “இணைந்த கைகள்” திமுகவின் லெட்டர் எடப்பாடி கையில்?
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து மாநில அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட போராடி வருகிறது. இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக உள்ளதால், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இதுவரை வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்காதது விஜய் தரப்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், “திமுக வெளியில் இருந்து ஆதரவு அளித்து அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது” என்ற தகவல் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இந்த தகவலை திமுக அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், அதிமுக தரப்பில் இருந்து தெளிவான மறுப்பு வெளியாகாதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசியலில் புதிய மாற்றம் உருவாகும் என்ற அச்சம் இரு பெரிய திராவிடக் கட்சிகளிலும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, நடிகர் எம்ஜிஆரைப் போல விஜயும் மக்கள் மத்தியில் வலுவான ஆதரவை உருவாக்கி விட்டால், எதிர்காலத்தில் அவரை அரசியல் ரீதியாக சமாளிப்பது கடினமாகிவிடும் என்ற கருத்து திமுக மற்றும் அதிமுக வட்டாரங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜயை ஆட்சியில் அமர விடாமல் தடுக்க அரசியல் கணக்குகள் போடப்படுகின்றன என்ற பேச்சும் நிலவுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரக்கூடும் என்ற தகவலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. மேலும், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் திமுக ஆதரவு குறித்த விவாதங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த அரசியல் பரபரப்பின் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ஆகியோரின் பெயர்கள் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியை இழந்ததை விட தனது தந்தை தோல்வியடைந்ததை உதயநிதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதன்பிறகே திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி குறித்த தகவல்கள் பரவ தொடங்கியதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும், உதயநிதி மற்றும் மிதுன் இடையே ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு கட்சிகளின் அடுத்த தலைமுறை வாரிசுகளாக பார்க்கப்படும் இவர்கள் இணைந்ததே தற்போதைய அரசியல் பரபரப்பிற்கு முக்கிய காரணம் என அதிமுக மற்றும் திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், “தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் திட்டமிட்ட முயற்சி நடக்கிறது” என்ற உணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தமிழக வெற்றிக் கழகமும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அனுதாப அலை உருவாகும் என்ற நம்பிக்கையும் அக்கட்சியில் நிலவுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே சாத்தியமற்றதாக கருதப்பட்ட திமுக - அதிமுக இணைப்பு உண்மையாவதா, அல்லது கடைசி நேரத்தில் விஜய் தேவையான ஆதரவை பெற்று ஆட்சியமைப்பாரா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
