“விஜய் சென்றாலும் தமிழ்சினிமாவில் வெற்றிடம் இல்லை” – ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி சமீபத்திய பேட்டியில், விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றாலும், தமிழ்த் திரைப்பட உலகில் வெற்றிடம் உருவாகாது என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தனது கடைசி திரைப்படமாக ஜன நாயகன் படத்தை அறிவித்த பிறகு, முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவரது அரசியல் பயணம் வேகமெடுத்து, தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றது.
இதுகுறித்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரம் என்பது உண்மை. ஆனால் அவர் அரசியலுக்கு சென்றதால் தமிழ்சினிமாவில் வெற்றிடம் ஏற்பட்டுவிடாது. தற்போது பல திறமையான நடிகர்கள் உள்ளனர். அவர்கள் அந்த இடத்தை நிரப்பும் திறன் கொண்டவர்கள்,” என்று கூறியுள்ளார்.
மேலும், புதிய தலைமுறை நடிகர்கள் மற்றும் கதைக்களங்கள் தொடர்ந்து தமிழ்சினிமாவை வளர்த்துக்கொண்டே செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய கருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சூர்யா சிவகுமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி வில்லன் வேடத்திலும் நடித்திருந்தார்.
திரைப்படம் உலகளவில் 230 கோடி ரூபாய்க்கும் அதிக வசூல் ஈட்டி, கடந்த சில ஆண்டுகளில் சூர்யாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

