கனடாவில் வேலை வாங்கித் தருவதாக எத்தியோப்பியாவுக்கு கடத்தப்பட்ட மூவர் மீட்பு: கிளிநொச்சி சந்தேகநபர் கைது!
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, எத்தியோப்பியாவில் கடத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள், வெற்றிகரமாக மீட்கப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடந்த மே 27ஆம் திகதியன்று, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவரால் இந்த மூவரும் இலங்கையிலிருந்து எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள், டுபாய் வழியாக எத்தியோப்பியா சென்றடைந்த நிலையில், அங்குள்ள சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கும்பலால் கடத்தப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்காக சுமார் 6.4 மில்லியன் ரூபாய் பணத்தை கிளிநொச்சி நபரிடம் வழங்கியிருந்தமை தெரியவந்தது.
அதுமட்டுமன்றி, கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அவர்களின் உறவினர்களிடமிருந்து மேலும் 2 மில்லியன் ரூபாய் வரை சந்தேகநபர் பெற்றுக்கொண்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் சர்வதேசக் கடத்தல் கும்பலுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்துள்ளமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா பொலிஸார் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய தீவிர நடவடிக்கையின் பலனாக, ஜூன் 06ஆம் திகதியன்று மூவரும் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது, கடத்தலில் ஈடுபட்ட நான்கு பாகிஸ்தானியர்களும் எத்தியோப்பிய நாட்டவர் ஒருவரும்
கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தலைமறைவாக இருந்த கிளிநொச்சியை சேர்ந்த முக்கிய சந்தேகநபர், நெடுங்கேனி பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மீட்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 34 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள், நேற்று முன்தினம் (01), விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சர்வதேசக் கடத்தல் வலையமைப்பு குறித்து மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Source: SriLanka Police