யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கம்சி, நோர்வேயின் போக்குவரத்து அமைச்சரானார்: இலங்கை வாழ்த்து
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அரசியல்வாதியான கம்சி குணரத்னம் நோர்வே நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நோர்வே அமைச்சரவை வரையிலான இவரது அரசியல் பயணத்தில் இது ஒரு வரலாற்று மைல்கல்லாகப் பார்க்கப்படும் அதேவேளை, நோர்வேயில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதலாவது தமிழ்ப் பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நோர்வே அரசாங்கத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், கடந்த போக்குவரத்து அமைச்சர் ஜோன்-ஐவர் நைகார்டுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சர் என்ற ரீதியில், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து கொள்கைகள் மற்றும் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றுள்ள கம்சி குணரத்னத்துக்கு இலங்கை அரசாங்கம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைச்சர் கம்சி குணரத்னத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு இதுவொரு பெருமைக்குரிய தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1988ஆம் ஆண்டு இலங்கையில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக மிகச் சிறிய வயதிலேயே குடும்பத்துடன் நோர்வேக்கு இடம்பெயர்ந்தார். பின்னர் நோர்வே தொழிலாளர் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், 2007ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் ஒஸ்லோ நகர சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2015 முதல் 2021 வரை ஒஸ்லோவின் துணை மேயராகப் பணியாற்றியதுடன், 2021ஆம் ஆண்டில் நோர்வே பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது 2025–2029 காலப்பகுதிக்காகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாம் மீது 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உட்டோயா துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலிலிருந்து தப்பியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வே அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் போதிலும், தாயகமான இலங்கையின் விவகாரங்கள் தொடர்பிலும் கம்சி குணரத்னம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே பாராளுமன்ற விவாதத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் பேசிய அவர், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் போர்க்காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் தனது தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.


எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.