வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! 30ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும்
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரிக் கொடுப்பனவுகளை எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்தி முடிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துநர்களுக்கு அவசர அறிவித்தல் விடுத்துள்ளது.
வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தண்டப்பணம் மற்றும் வட்டியைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமது கொடுப்பனவுகளைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பானது கூட்டிணைந்த வருமான வரி (CIT), தனிநபர் வருமான வரி (IIT) மற்றும் பங்குடைமை வருமான வரி (PIT) ஆகிய அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கூட்டிணைந்த வருமான வரிக்கான குறியீடு 02, தனிநபர் வருமான வரிக்கான குறியீடு 05, பங்குடைமை வருமான வரிக்கான குறியீடு 09 எனவும், இம்மூன்று பிரிவுகளுக்குமான கொடுப்பனவு காலப்பகுதிக் குறியீடு 25260 மற்றும் கொடுப்பனவு வகை 'S' எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வரி செலுத்துநர்கள் தமது வரிக் கொடுப்பனவுகளை இணையவழி வரிக் கொடுப்பனவு தளத்தினூடாக (OTPP) செலுத்த முடியும் எனவும், அத்துடன் இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் கூட்டிணைந்த, தனிநபர் மற்றும் பங்குடைமை வருமான வரிகளைச் செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியைச் செலுத்தாது விடுதல் அல்லது காலதாமதமாகச் செலுத்துதல் ஆகியவற்றிற்கான வட்டி மற்றும் தண்டப்பணம் என்பன எக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வரி செலுத்துநர்கள் மேலதிக விவரங்களைப் பெற 1944 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடனோ அல்லது 011 213 4780 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.