வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்ற இருவர் கைது
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்ட துறைமுக ஊழியர் ஒருவர் மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது, துறைமுகத்துக்குள் கொண்டுவரப்பட்ட வாகனங்களிலிருந்து ஸ்மார்ட் சாவிகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் ஊழியர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், குறித்த ஊழியர் திருடப்பட்ட ஸ்மார்ட் சாவிகளை வாகன வகைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வர்த்தகருக்கு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த பல மாதங்களாக சுமார் 45 ஸ்மார்ட் சாவிகள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அந்த ஊழியர் 1.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் சம்பாதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஊழியர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், குருநாகலில் உள்ள வர்த்தகரை கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்த பல ஸ்மார்ட் சாவிகளையும் மீட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்த மோசடி இடம்பெற்று வந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.