அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 250 இளநீர் கிராமங்கள் உருவாக்க திட்டம்!

இலங்கையில் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை 250 “Ceylon King Coconut Village” கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 250 இளநீர் கிராமங்கள் உருவாக்க திட்டம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 250 “Ceylon King Coconut Village” கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த தேசிய திட்டம், இன்று (02) குருநாகல் மாவட்டத்தில் தெங்கு பயிர்ச்செய்கை சபைக்குச் சொந்தமான மஹாயாய தோட்ட வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டின் இளநீர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், இளநீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதன்படி, 2026ஆம் ஆண்டில் 75 இளநீர் கிராமங்களும், 2027ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028ஆம் ஆண்டில் 95 கிராமங்களும் உருவாக்கப்படவுள்ளன. இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் மொத்தம் 250 இளநீர் கிராமங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் வருடாந்த இளநீர் அறுவடையை 25 மில்லியன் அளவால் அதிகரிப்பதுடன், இளநீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்றுமதி வருமானத்தை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவதும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

இளநீர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஏற்கனவே உள்ள இளநீர் மரங்களைப் புனரமைக்கும் போது ஒரு மரத்திற்கு 700 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, புதிய பயிர்ச்செய்கைக்காக ஒரு இளநீர் கன்றின் பெறுமதி 750 ரூபாயாக இருந்தாலும், விவசாயிகளுக்கு அது 150 ரூபாய் மானிய விலையில் வழங்கப்படவுள்ளது.

2026ஆம் ஆண்டில் 20,300 இளநீர் மரங்களைப் புனரமைப்பதுடன், 37,500 புதிய இளநீர் கன்றுகளை நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 212,500 புதிய இளநீர் கன்றுகளை நடவு செய்வதுடன், ஏற்கனவே உள்ள 221,500 மரங்களைப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, மொனராகலை, மாத்தறை, குருநாகல், கேகாலை, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை, மாத்தளை, காலி, மட்டக்களப்பு மற்றும் கண்டி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 75 இளநீர் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.

இதனுடன், இளநீர் உற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை உள்ளடக்கிய முறையான தரவுத்தளத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 500 ஏக்கர் இளநீர் பயிர்ச்செய்கைக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதுடன், இளநீர் பயிர்ச்செய்கை மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“Ceylon King Coconut Village” தேசிய திட்டத்தின் ஊடாக இளநீர் உற்பத்தி முதல் சேகரிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வரையிலான துறைகளில் புதிய வருமான மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கி, சுமார் 21,250 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கிராமப்புற மக்களின் வருமானத்தை வலுப்படுத்தி, அவர்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக பங்கெடுக்கும் வகையில் ஊக்குவிப்பதே திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர