2027இல் உலகை வாட்டப்போகும் வெப்பம்? எல் நினோ குறித்து பிரித்தானியாவின் எச்சரிக்கை!
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño), நம் நினைவில் உள்ள காலங்களிலேயே மிக வலிமையானதாக இருக்கக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த இயற்கையான காலநிலை மாற்றம், உலகளாவிய வெப்பநிலையை உயர்த்தக்கூடும் மற்றும் தீவிர வானிலை அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என்றும் குறித்த ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. .
மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுடன் இந்த எல் நினோவும் இணைவதால், பதிவான வரலாற்றிலேயே 2027ஆம் ஆண்டு உலகளவில் மிக வெப்பமான ஆண்டாக மாறுவதற்கு "அதிக வாய்ப்பு" (very likely) உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது இதற்கு முன் மிக வெப்பமான ஆண்டாக இருந்த 2024ஆம் ஆண்டின் சாதனையை முறியடிக்கக்கூடும்.
உலகெங்கிலும் உள்ள வானிலை வடிவங்கள் ஏற்கெனவே இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தெற்காசியாவில் (இந்தியாவில்) தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகப் பதிவாகி வருகிறது. அதே நேரத்தில், அட்லாண்டிக் பெருங்கடலில் புயல்களின் தாக்கம் குறைந்துள்ளது. இந்தப் புயல் பருவத்தில் இதுவரை மூன்று பெயரிடப்பட்ட புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன. மேலும், பிரித்தானியாவில் இலையுதிர்காலத்தில் அதிக மழை மற்றும் கடுமையான புயல்கள் ஏற்படும் அபாயத்தை இந்த எல் நினோ அதிகரிக்கக்கூடும்.
பிரித்தானிய வானிலை ஆய்வு மையத்தின் நீண்டகால முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஆடம் ஸ்கைஃப் (Prof Adam Scaife) இது குறித்துக் கூறும்போது, "இது ஒரு முன்னோடியில்லாத மாற்றம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "எங்களது முன்னறிவிப்புகளில் இந்த அளவுக்கு தீவிரமான ஒரு எல் நினோ சமிக்ஞையை நான் இதுவரை பார்த்ததே இல்லை" என்று கவலை தெரிவித்துள்ளார்.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கையாக நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும். இது சுமார் ஒரு வருடம் நீடிக்கும். பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் வர்த்தகக் காற்றுகள் (Trade winds) பலவீனமடையும் போது அல்லது திசை மாறும் போது, வெப்பமான நீர் கிழக்கு நோக்கிப் பரவுகிறது . இதனால் கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு வெப்பம் வெளியிடப்பட்டு, உலகளாவிய வெப்பநிலை உயர்வதோடு, மழைப்பொழிவு வடிவங்களும் மாறுகின்றன.
பசிபிக் பெருங்கடலின் முக்கியப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 0.5°C அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் போது விஞ்ஞானிகள் எல் நினோவை அறிவிக்கிறார்கள்.
தற்போது, இந்த வெப்பநிலை வழக்கத்தை விட 2°C-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ அதன் உச்சத்தை எட்டும்போது, இந்த வெப்பநிலை வேறுபாடு 3°C-ஐத் தாண்டக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது 1950ஆம் ஆண்டிலிருந்து பதிவான தரவுகளில் இதுவரை இல்லாத ஒன்றாகும். மேலும், இது 19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்படும் மிக வலிமையான நிகழ்வாக இருக்கலாம். சில இடங்களில் சுமார் 100 மீட்டர் (330 அடி) ஆழத்தில் உள்ள ஆழ்கடலின் வெப்பநிலை இயல்பை விட சுமார் 8°C அதிகமாக உள்ளது. இது இந்த எல் நினோவை மேலும் தீவிரப்படுத்தத் தேவையான வெப்ப நீர் எரிபொருளாகச் செயல்படுகிறது.

500 முதல் 1000 ஆண்டுகளில் இல்லாத கடுமையான மாற்றம்
அமெரிக்க ஆராய்ச்சி அமைப்பான 'பெர்க்லி எர்த்' (Berkeley Earth) காலநிலை விஞ்ஞானி டாக்டர் ஜீக் ஹவுஸ்ஃபாதர் (Dr Zeke Hausfather) கூறும்போது, "இந்த மாற்றம் தொடர்ந்து உருவாக இன்னும் பல மாதங்கள் உள்ளன. எனவே இது ஒரு புதிய சாதனையைப் படைக்கும் நிகழ்வாக இருக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
வேறு சில காலநிலை அமைப்புகள் சராசரியை விட 4°C வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று கணித்துள்ளன. அது உண்மையானால், "இது கடந்த 500 அல்லது 1,000 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக வலிமையான எல் நினோ நிகழ்வாக இருக்கக்கூடும் என்று கூறுவது சாத்தியமற்றது அல்ல" என்று ஹவுஸ்ஃபாதர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்
எல் நினோவினால் ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களால் ஆபத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN's FAO) இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்துள்ளது.