எல் நினோ தாக்கம்: இலங்கையில் 81,865 பேருக்கு குடிநீர் நெருக்கடி – மொனராகலையில் மட்டும் 33,023 பேர் பாதிப்பு
எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 7 மாவட்டங்களில் உள்ள 25,628 குடும்பங்கள் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது 72,153 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு 7 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10,264 குடும்பங்களில் உள்ள 33,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 28,523 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 8,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,882 பேருக்கு ஏற்கனவே குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பதுளை மாவட்டத்தில் 7,876 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2,646 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தில் 499 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 515 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுடன், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.