அக்டோபரில் தீவிரமடையும் 'எல் நினோ' காலநிலை: நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த விசேட திட்டம் அறிமுகம்!
பசிபிக் பெருங்கடலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்பட்ட போதிலும், வரவிருக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது தீவிரமடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளின்படி, இந்த 'எல் நினோ' தாக்கத்தால் இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று அத்திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகளின்படி, இந்த ஆண்டின் நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் 'எல் நினோ' மிகத் தீவிரமான நிலையை எட்டுவதற்கு 63% சாத்தியக்கூறுகள் உள்ளன.
தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விடக் குறையக்கூடும் என்றும், அதேநேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான அளவை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நீர் இருப்பு மற்றும் இனி கிடைக்கவுள்ள மழைவீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முறையான நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் (Water Management) மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய, மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண காலநிலை மாற்றத்திற்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக அனைத்து அமைச்சுகளையும் ஒன்றிணைத்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார். மேலும், எல் நினோ பாதிப்பைக் குறைக்கும் வகையில், வரவிருக்கும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை வழக்கமான காலத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்குமாறு அவர் விவசாயப் பெருமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.