சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய விஜயம் இருதரப்பு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?
பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் புதுடெல்லிக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திய போதிலும், வணிக மற்றும் முதலீட்டு உறவுகள் இன்னமும் பரஸ்பர சந்தேகங்களினால் கட்டுண்டு கிடப்பதாக இராஜதந்திர மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் என்பதுடன், 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு எல்லை மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் முக்கிய நகர்வாகவும் இது பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் சுமார் 400 அதிகாரிகளைக் கொண்ட பாரிய தூதுக்குழுவுடன் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது வந்த குழுவினரை விட இது இரு மடங்கு அதிகமாகும். எனினும் எல்லைப் பகுதியில் நீடிக்கும் பதற்றங்களை முழுமையாகத் தணிப்பது மற்றும் இருதரப்பு நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வது தொடர்பான விடயங்களில் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் தொடர்ந்தும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் 3,800 கிலோமீட்டர் நீளமுடைய இமயமலை எல்லைக் கோட்டில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, சீன நிறுவனங்களின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்ததுடன், நூற்றுக்கணக்கான சீன செயலிகளையும் தடை செய்தது.
அண்மைய மாதங்களில் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குதல், விசா நடைமுறைகளைத் தளர்த்துதல் மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்து சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை போன்ற இராஜதந்திர ரீதியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தியாவிலுள்ள சீன நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை மற்றும் நிதி விசாரணைகள் தொடர்வதும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கடுமையான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதும் வணிக ரீதியான முழுமையான இயல்பு நிலைக்குத் தடையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள சர்வதேச பொருளாதார அழுத்தங்கள், ஆசியாவின் இவ்விரு பெரும் பொருளாதார சக்திகளையும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஊடாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.