ஐக்கிய தேசியக் கட்சி ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்களைப் பாதுகாக்க அக்கட்சி முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த காலத்திலும் நாமல் ராஜபக்ஷ ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய நடவடிக்கை ஒன்றும் புதிய விடயமல்ல எனவும் தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதான ஒன்றல்ல என்றும், அவர் விளக்கமறியலுக்குச் செல்வது இது முதல் முறையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள வழக்கு பல வருடங்களுக்கு முந்தைய குற்றச்சாட்டுடன் தொடர்புடையது எனவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரே விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில் சுமார் நூறு மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கைப்படுத்தியதாக அவர் கூறினார்.
சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் அறிக்கையைச் சமர்ப்பித்ததாகவும், அதனடிப்படையில் அவரை விளக்கமறியலில் வைக்கும் தீர்மானத்தை நீதிமன்றமே எடுத்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர், உரிய சட்ட நடைமுறைகளே இங்கு பின்பற்றப்பட்டதாகவும் தெளிவுபடுத்தினார்.
நாமலின் விளக்கமறியலைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை, அக்கட்சி தற்போது எந்தப் பக்கம் நிற்கிறது என்பதைக் காட்டுகின்றது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சாடினார். ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்களும் நீண்டகாலமாக அந்தக் கட்சிக்காக உழைத்தவர்களும் கூட அக்கட்சியின் இந்த அறிக்கையைக் கண்டு வியப்படைவார்கள் என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.
ஊழல் மற்றும் குற்றச்செயல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களின் பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி சாய்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், அக்கட்சியுடன் தொடர்புடைய பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்பொழுது இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும், தங்களில் ஒருவர் கைது செய்யப்படும்போது ஊடக அறிக்கைகள் மற்றும் குரல் பதிவுகள் ஊடாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
விசாரணைகள் உரிய அரச அதிகார அமைப்புகளினாலேயே முன்னெடுக்கப்படுவதாகவும், உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பது தொடர்பான தீர்மானங்களை நீதிமன்றங்கள் சுயாதீனமாக மேற்கொள்கின்றன என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.