ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை; வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிப்பு

இந்த நடவடிக்கை, திருத்தப்பட்ட 1994ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் ஊழல் குற்றமாகக் கருதப்படுகிறது.
ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை; வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு மேலதிக நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி வரை ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தேசிய லொத்தர் சபையின் அப்போதைய தலைவர் ஷமிலா பெரேராவுடன் இணைந்து, நிதியமைச்சின் சிறப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு மேலாண்மை உதவியாளர் உட்பட மூன்று நபர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார்.

இந்த நபர்கள் தேசிய லொத்தர் சபைக்கு எந்தவொரு சேவையும் வழங்காத போதிலும், அவர்களுக்குச் சம்பளமும் கொடுப்பனவுகளும் லொத்தர் சபையின் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊழியர்களைத் தனது அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி, அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, திருத்தப்பட்ட 1994ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் ஊழல் குற்றமாகக் கருதப்படுகிறது.

இக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் வராததால், கடந்த சனிக்கிழமை விசாரணை அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தனர். எனினும், அவர் வீட்டில் இருக்கவில்லை.

தனிப்பட்ட காரணங்களால் ஆஜராவதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு, தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதை அடுத்து, பிற்பகல் 1:40 மணியளவில் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியதோடு, வெளிநாடு செல்லத் தடையும் விதித்துள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர