மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவியேற்பு
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, இன்று புதன்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, பொது சுகாதாரத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவராகக் கருதப்படுகிறார். குறிப்பாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) தடுப்பூசி தொடர்பான விசேட மருத்துவ நிபுணராக பல்வேறு நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் சமூக மருத்துவ நிபுணராகவும் சேவையாற்றியுள்ள அவர், சுகாதார நிர்வாகம் மற்றும் பொதுச் சுகாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டவர்.
இந்நிலையில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.