தேசிய மக்கள் சக்தியை தவிர அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை: ரணிலின் அடுத்த பாய்ச்சல்
இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கான உத்தேச தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்களை இலகுபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த ஆவணம் ஐக்கிய தேசியக் கட்சிக்காக மாத்திரம் தயாரிக்கப்படவில்லை எனவும், பெலவத்தையைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவான தேசிய வேலைத்திட்டமொன்றின் ஊடாக அரசியல் கட்சிகளிடையே சாத்தியமான பரந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீடுகளை ஊக்குவித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி யோசனை முன்வைத்தார்.
அதேவேளை, இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் கவலை வெளியிட்ட அவர், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் எச்சரித்தார்.
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளையும் முன்வைத்த ரணில் விக்ரமசிங்க, 125 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்தல் தொகுதிகள் ஊடாகவும், அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களில் 25 வீதமான பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறும் பரிந்துரைத்தார்.
அத்துடன், தேசியப் பட்டியல் முறைமையின் கீழ் ஒதுக்கப்படும் எஞ்சிய 100 ஆசனங்களில் 25 ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தனியான அரசியலமைப்பு நீதிமன்றத்தை நிறுவுதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான நல்லாட்சி மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகிய விடயங்களும் இந்த யோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1975 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனத்தின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டதாகவும், இது ஒரு இறுதி ஆவணம் அல்ல எனவும் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினருடனான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த புதிய அரசியல் வேலைத்திட்டத்தை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைப்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.