இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளார். இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நாட்டை வந்தடைந்தார்.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
1988ஆம் ஆண்டு கே.சி. பந்தின் வருகைக்குப் பின்னர், சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!#SriLankaNews #News21Tamil #BreakingNews #lka #lka pic.twitter.com/E9XETd9aVp
— News21 Tamil (@News21Tamil) September 8, 2026
தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி சம்பத் துய்யகொந்த ஆகியோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் நேரில் சந்திக்கவுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய விவகாரங்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எட்டப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இரு தரப்பிலும் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.