பிரதி அமைச்சர் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து பிரதி அமைச்சரின் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனிநபர்கள் அல்லது குழுக்கள் பிரதி அமைச்சர் பேசுவதாகக் கூறி, தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பணம் மற்றும் இதர உதவிகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இத்தகைய நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் கிடைத்தால், அது குறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கை, நேற்று (01) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.