வருங்கால கணவருடன் மகிழ்ச்சியாக நடனமாடிய சில மணி நேரங்களில் கொலை; பூனா தொழிலதிபர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத் திட்டங்களின் பின்னணியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருங்கால கணவருடன் மகிழ்ச்சியாக நடனமாடிய சில மணி நேரங்களில் கொலை; பூனா தொழிலதிபர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பூனாவைச் சேர்ந்த 26 வயதான தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேதன் அகர்வாலும் சியா கோயலும் கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. திருமண நிகழ்விற்காக உறவினர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில், போலீஸ் விசாரணையில் சியா மற்றும் அவரது காதலர் சேத்தன் கடந்த ஆறு மாதங்களில் ஆயிரக்கணக்கான முறை தொலைபேசியில் பேசி கொலைத் திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. சியாவின் பிறந்தநாளான ஜூன் 18 அன்று, கேதன் பல்வேறு பரிசுகளை வழங்கி அவரை மகிழ்வித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நாளில் சியா, தனது காதலரை ரகசியமாக சந்தித்து, லோஹகாட் கோட்டையில் எந்தப் பகுதியில் இருந்து கேதனை தள்ளிவிடலாம் என்பது குறித்து ஆலோசித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சியா, கேதனை கோட்டைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களை காதலர் சேத்தன் தொலைவில் இருந்து பின்தொடர்ந்து கண்காணித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தகவல்களின்படி, முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்து கேதன் பள்ளத்தாக்கில் தள்ளிவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு முன்பான புகைப்படப் படப்பிடிப்பிற்காக பாலி செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கேதனின் பாஸ்போர்ட்டை சியா ரகசியமாக அகற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவத்துக்குப் பிறகு, கேதன் தவறி விழுந்ததாக சியா முதலில் தெரிவித்தார். பின்னர் அவரது விளக்கத்தில் முரண்பாடுகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சம்பவம் நடந்த இடமும் பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத பகுதி என்பதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கேதனும் சியாவும் மகிழ்ச்சியாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடுத்த கட்டங்களில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -