உதயநிதி ஸ்டாலின் கைது: முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பேசியதால் நடவடிக்கை!
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக இன்று (04) காலை கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் நேற்று (03) காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசை கடுமையாக விமர்சித்ததோடு, நடிகை த்ரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக முறைப்பாடு எழுந்தது.
மேலும், அதே நிகழ்வில் நடிகை த்ரிஷாவைக் குறிவைத்து அவதூறான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும், இது குறித்து தவெக தரப்பில் பொலிஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலை ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் விசாரணைக்காகத் தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் விவசாயிகளின் நலன் குறித்தும், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவது குறித்தும் 22 நிமிடங்கள் பேசியதாகக் குறிப்பிட்டார்.
மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பவே அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
"நான் பேசாத ஒன்றை பேசியதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து என்னைக் கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை, இதனைச் சட்டப்படி சந்திப்பேன்" என்றும் அவர் கூறினார்.
