ஜூலை முதல் தீவிரமடையும் 'எல் நினோ'... இலங்கையில் வெப்பம், வறட்சி அதிகரிக்கும் அபாயம்!
உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலையை ஏற்படுத்தும் முக்கிய இயற்கை நிகழ்வான 'எல் நினோ' (El Niño), ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல் நினோ நிகழ்வுகள் பொதுவாக பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு பதிவாகவுள்ள எல் நினோ, மூன்றாவது உச்சக் கட்டமான தீவிர நிலையை எட்டும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அசாதாரணமாக உயர்வதே எல் நினோ எனப்படும் இயற்கை காலநிலை மாற்றத்தின் முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்வு பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகி, 9 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை நீடிக்கக்கூடும்.
மூன்றாவது உச்சக் கட்ட நிலையில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1.5 முதல் 2.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
இலங்கை உள்ளிட்ட பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகள் இந்த காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மழைப்பொழிவு குறைவதால் நெல் உள்ளிட்ட விவசாயப் பயிர்களுக்கு தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விளைச்சல் குறையும் அபாயம் காணப்படுகிறது.
மேலும், முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறையக்கூடும் என்பதால், நீர்மின் உற்பத்தியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைதல், சூரிய வெப்பத் தாக்கம் (Heat Stroke), காய்ச்சல் உள்ளிட்ட வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள், இயற்கையாக உருவாகும் எல் நினோ நிகழ்வுகளின் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.