நீர்கொழும்பு சிறை மோதல்: 2 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம் - விசாரணைக்கு சிறப்புக் குழு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 36 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (05) மதியம் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதலை அடுத்து சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆண் கைதிகள் மோதலில் ஈடுபட்ட நிலையில், பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலிஸார், விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இலங்கை இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்.
இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணைகளில், 'பூரு மூனா' என்றழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரே இந்த மோதலுக்கு தலைமை தாங்கியதாகத் தெரியவந்துள்ளது. சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்துவதற்கான முயற்சி தொடர்பான தகவல் சிறை அதிகாரிகளுக்கு கிடைத்ததே இந்த மோதலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
மோதல் தீவிரமடைந்த நிலையில், கைதிகள் சிறையில் உள்ள விசேட கைதிகளின் தடுப்புக் கூண்டுகளின் பூட்டுகளை உடைத்து அவர்களைத் தாக்கியதாகவும், மருந்தகத்திற்குள் புகுந்து வலி நிவாரணிகளை அதிகளவில் உட்கொண்டு போதையேறும் நோக்கில் செயல்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தால் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
தற்போது சிறைச்சாலைக்குள் ஒழுங்கு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் கைதிகளுக்கு இடையிலான உள்மோதலாகவே கருதப்படுவதாகவும், சிறை அதிகாரிகள் எவரும் இதில் ஈடுபடவில்லை என்றும் கஜநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்த கைதிகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் தற்போது 2,417 கைதிகள் உள்ளனர்.