இலங்கையில் டெங்கு பாதிப்பு 55,000-ஐ கடந்தது; உயிரிழப்பு 32 ஆக உயர்வு
இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் புதிதாக 1,024 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ஜூன் மாதத்தில் மட்டும் 21,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிக பாதிப்பு பதிவான மாவட்டங்கள்
டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவான மாவட்டங்களில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.
கொழும்பு மாவட்டம் – 11,392 பேர்
கம்பஹா மாவட்டம் – 11,006 பேர்
டெங்கு நோய் வேகமாகப் பரவுவதற்கு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முழுமையாக அகற்றாததே முக்கிய காரணம் என வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாகவும், எனவே சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நுளம்புகள் பெருகக்கூடிய நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்றி, டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.