பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானபோதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ்மா அதிபருக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய சாகர காரியவசம், "பொலிஸ்மா அதிபர் நடுவீதியில் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் என வரலாற்றில் பதிவாவதை நாம் விரும்பவில்லை" என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக இன்று காலை 10.30 மணியளவில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான சாகர காரியவசம், வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தான் பொலிஸ்மா அதிபர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தவறாக விளக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.