எளிய தவணையில் வீடு : பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் இருவர் கைது!
எளிய தவணை முறையில் வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வீடுகளைக் கட்டிக் கொடுக்காமல் மோசடி செய்த தனியார் நிறுவனம் தொடர்பில், மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் முகாமையாளராகவும் செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றிய இரண்டு சந்தேகநபர்களைப் பொலிஸார், நேற்று முன்தினம் (17) கைது செய்துள்ளனர்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபர்களிடமிருந்து 04 சொகுசு கார்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கஹவத்தை மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும், நுகேகொட நீதவான் நீதிமன்றில் நேற்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 29ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இக்குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர், கடந்த ஜூலை 28ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரையும் தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த தனியார் நிறுவனத்துக்கு எதிராக மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இதுவரை 245 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.