கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருட்களுடன் வேன் சாரதி கைது
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிப் பயணிக்க முற்பட்ட வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேனில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு விநியோகிக்கப்படுவதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, வெலிவேரிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் நேற்றிரவு இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேன் உடுகம்பொல பகுதியை நோக்கிப் பயணிப்பதை உறுதிசெய்த பொலிஸார், பொலிஸ் ஜீப் வண்டியில் அதனை இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பொலிஸார் தம்மைப் பின்தொடர்வதை அறியாத வேனின் சாரதி, உடுகம்பொல வீதியிலுள்ள மல்வத்த சந்தியருகே வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ஜீப் வண்டியிலிருந்து இறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறித்த வேனைச் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது வேனை மிக வேகமாக முன்னும் பின்னுமாகச் செலுத்திய சாரதி, வீதியில் பயணித்த ஏனைய வாகனங்கள் மீதும் பொலிஸ் ஜீப் வண்டி மீதும் மோதியுள்ளார்.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதுடன், அங்கிருந்து சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் வேனை நோக்கித் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டதில், அதன் சாரதி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார்.
காயமடைந்த சாரதி பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த வேனைப் பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிலிருந்து 15 கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.