யோஷித மற்றும் ரோஹிதவிற்கு எதிரான 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக தினமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு, குறித்த அமைப்பின் தலைவர் காமந்த துஷாரவினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு முறைப்பாட்டாளருக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களுக்கும் உரிய ஆவண சான்றுகளுடன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இம்மாதம் 14 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தருமாறும் முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.