மலைப்பாம்புடன் நடனமாடிய யுவதிக்கு ரூ. 50,000 அபராதம்: வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
அழகு ராணிப் போட்டியின் போது மலைப்பாம்புடன் நடனமாடிய யுவதி ஒருவருக்கும், அந்தப் பாம்பை அவருக்கு விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, பெல்லன்விலாவில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட வனவிலங்கு வரம்பு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பணத்துக்காக மலைப்பாம்பை வழங்கிய நபர் மற்றும் அந்த யுவதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 22ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்கள் இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதன்போது, பாதுகாக்கப்பட்ட விலங்கு ஒன்றை நடனத்துக்காக வைத்திருந்த மற்றும் பயன்படுத்திய குற்றத்துக்காக யுவதிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், பாதுகாக்கப்பட்ட விலங்கை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக மற்றைய நபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதவான் உத்தரவிட்டார்.
பாதுகாக்கப்பட்ட எந்தவொரு வனவிலங்கையும் வைத்திருப்பது, கொண்டு செல்வது, காட்சிப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இத்தகைய விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.