ஒரே சுவர் பிரித்ததால் குறிவைத்த வீடு எது என தெரியாமல் போனது; தெஹிவளை சம்பவத்தில் கைதானவர்கள் பரபரப்பு தகவல்!

தெஹிவளையில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலை நடத்திய பிரதான சந்தேக நபர் மற்றும் ஓட்டோ சாரதி ஆகியோர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே சுவர் பிரித்ததால் குறிவைத்த வீடு எது என தெரியாமல் போனது; தெஹிவளை சம்பவத்தில் கைதானவர்கள் பரபரப்பு தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரு சிறுவர்களைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் அவர் பயணித்த ஓட்டோ சாரதி ஆகியோர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11ஆம் திகதி அதிகாலை, குறித்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த தந்தையின் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சிறுவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் பெருமளவிலான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் நேரடி மேற்பார்வையிலும், மேல் மாகாண தெற்குப் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் வழிகாட்டலிலும் பல பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டன.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓட்டோவின் நிறத்தை மாற்றுவதற்காக அதனை கராஜில் ஒப்படைத்த சந்தேகநபர் ஒருவரும், குறித்த கராஜின் உரிமையாளரும் முன்னதாக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 10ஆம் திகதி இரவு குறித்த ஓட்டோவை களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 'ஹிரு மல்லி' என அழைக்கப்படும் ஹிருத்ம ஷஷ்மிக என்பவர் எடுத்துச் சென்றதாக அவர்கள் விசாரணைகளின் போது வெளிப்படுத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளில், ஹிரு மல்லி என்பவருடன் சேர்ந்து 'மது' என அழைக்கப்படும் மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்பவரே சென்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, தாக்குதலை நேரடியாக நடத்திய மதுஷ்க ரேணுக மற்றும் ஓட்டோவை செலுத்திய சாரதி ஆகிய இருவரும் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தாக்குதல் நடத்தப்பட்ட வீடும், தாம் இலக்கு வைத்த வீடும் ஒரே சுவரினால் பிரிக்கப்பட்டு அடுத்தடுத்து அமைந்திருந்ததால், இரு வீடுகளையும் தம்மால் சரியாக அடையாளம் காண முடியாமல் போனதாக கைது செய்யப்பட்ட குண்டுதாரி, பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தமது உறவினரின் மகனான 'கொஸ் மல்லி' மற்றும் போதியாவத்த அவிஷ்க ஆகியோரின் நெறிப்படுத்தலிலேயே இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட 'மது' என்ற நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற 'ஜாதுங்க பிரியந்த' என்பவரின் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான துப்பாக்கிதாரி என்பதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT