மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயற்சி! 22 கிராம் ‘ஐஸ்’ உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது
கொழும்பு, பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் பல்வேறு பொருட்களை வீச முயன்றதாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்களை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை, நேற்று சனிக்கிழமை (08) நண்பகல், பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த பொலிஸார், அவர்களை கண்காணித்துள்ளனர். இதன்போது, குறித்த இருவரும் சிறைச்சாலையின் மதிலுக்கு அப்பால் இரண்டு பொதிகளை வீசுவதற்கு முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார், இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பொதிகளை சோதனையிட்டுள்ளனர்.
அந்த சோதனையின்போது, சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து
22 கிராம் 250 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள்
02 மில்லிகிராம் ‘ஏஷ்’ போதைப்பொருள்
02 தொலைபேசி சார்ஜர்கள்
02 ஜோடி தோடுகள்
10 லைட்டர்கள்
02 சிறிய ரக கையடக்கத் தொலைபேசிகள்
என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் முயற்சியின் பின்னணியில் வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.