விமான நிலையத்தில் 39,400 சிகரெட்டுகள் பறிமுதல்: வெளிநாட்டவருக்கு 250,000 ரூபாய் அபராதம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 39,400 வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்த முயன்ற 40 வயது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர், இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை (01) முற்பகல் 11.45 மணியளவில் சென்னையிலிருந்து IndiGo 6E1175 விமானம் மூலம் வருகை தந்த குறித்த நபர், விமான நிலையத்தின் பசுமை வழிப்பாதையில் வைத்து அதிகாரிகளால் சோதனையிடப்பட்டார்.
அவர் ஒரு வணிக நிறுவன ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரின் இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 197 அட்டைப்பெட்டிகளில் (Cartons) இருந்து மொத்தம் 39,400 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட இந்தச் சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி சுமார் 5.91 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சிகரெட்டுகளை அரசுடமையாக்க, இலங்கை சுங்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபருக்கு 250,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.