2027 முதல் நடைமுறைக்கு வரும் பாடசாலை முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான புதிய சுற்றறிக்கை – அமைச்சரவை ஒப்புதல்
2027 முதல் நடைமுறைக்கு வரும் பாடசாலை முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான புதிய சுற்றறிக்கை – அமைச்சரவை ஒப்புதல்
அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் முறையை நிர்வகிக்கும் புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தப் புதிய சேர்க்கை சுற்றறிக்கை, கல்விக்கான சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும், ஒழுங்கின்மைகளைக் குறைப்பதற்குமான நோக்கில் வெளியிடப்படுகிறது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோரின் கருத்துக்களை உள்ளடக்கியதுடன், தொடர்ச்சியான கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்தும் புதிய கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை சேர்க்கை செயல்முறையில் நீதியை வலுப்படுத்தவும், தவறான நடைமுறைகளைக் குறைக்கவும், குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் என்ற முறையில் பிரதமர் ஹரினி அமரசூரியவால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவையால் இந்த யோசனை அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.