உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது சட்ட ஆலோசகரின் அறிவுரை மற்றும் கோரிக்கையை ஏற்றே இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
காவலில் இருந்தபோதே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது இரண்டு வாரங்களுக்கும் மேலாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், சுரேஷ் சலே தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலிலேயே உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.