ரணில் – சஜித் முக்கிய சந்திப்பு: அரசியல் நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனை?
இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு முக்கிய சந்திப்பு சமீபத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு மிகவும் இரகசியமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நேரடி சந்திப்பிற்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் லக்கி ஜயவர்தன ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அந்த கலந்துரையாடல்களில் உருவான இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே பின்னர் ரணில் – சஜித் சந்திப்பு நடைபெற்றதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால அரசியல் கூட்டணிகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
எனினும், இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.