சிறுத்தைப் பற்கள், தோல் , மான் கொம்பு என சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட வனவிலங்குப் பொருட்கள்: மூவர் கைது
பொரளை மற்றும் பாணந்துறைப் பகுதிகளில் வனவிலங்குப் பாகங்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததோடு, அவற்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட 08 கோப்பைகள், ஒரு மாலை, வளையல் மற்றும் பொருட்களை வைக்கும் பெட்டி ஆகியன இதன்போது கைப்பற்றப்பட்டன.
அத்துடன், இரண்டு அடி நீளமுள்ள ஒரு போலித் தந்தம் மற்றும் யானை முத்துக்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வளையல்கள், ஐந்து சிறுத்தைப் பற்கள் மற்றும் இரண்டு சிறுத்தைத் தோல்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும், ஒரு மான்கொம்பு, இரண்டு கருப்பு பவளத் துண்டுகள், கடல் சங்குகள் மற்றும் சிப்பிகளும் இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன.
இலங்கை விமானப்படை வழங்கிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், குருநாகல், புலத்கோபிட்டிய மற்றும் அத்திடிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும், ராஜகிரிய பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்தக் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மாளிகாகந்த மற்றும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.