AI ஆபாச வீடியோக்கள் முதல் Facebook குழுக்கள் வரை – பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை!
குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச காணொளிகளை பகிரும் சமூக ஊடக தளங்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய இலங்கை பொலிஸார் விசேட மின்னஞ்சல் முகவரியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் குழுக்களில், குழந்தைகள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் அதிகளவில் பரவி வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வாறான ஆபாச உள்ளடக்கங்களை பகிரும் சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தளங்கள் தொடர்பான முறைப்பாடுகளை dir.cid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான உள்ளடக்கங்களை பரப்பும் பேஸ்புக் குழுக்களை அடையாளம் கண்டு, அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 வயது இளைஞர் கைது
இதற்கிடையில், குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்த பேஸ்புக் குழுவொன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், இலங்கை பொலிஸாரின் கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு 011 2381058 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்டு ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்குதல், பகிர்தல் அல்லது பரப்புதல் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.