தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தன்னுடைய இராணுவ ஆட்சி முயற்சி என்பது எதிர்க்கட்சியினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கான ஒரு எளிய நடவடிக்கை மட்டுமே என்று யூன் வாதிட்டார்.

பெப்ரவரி 19, 2026 - 13:45
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், கடந்த 2024 டிசம்பரில் மேற்கொண்ட தோல்வியடைந்த இராணுவ ஆட்சி முயற்சி மற்றும் கிளர்ச்சி தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 65 வயதான யூன் சுக் இயோல் பிறப்பித்த அந்த அவசரகால இராணுவ ஆட்சி உத்தரவு வெறும் ஆறு மணி நேரம் மட்டுமே நீடித்தாலும், அது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே உலுக்கியது. இந்த நிகழ்வு அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கியதுடன், கடந்த தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடையவும் முக்கிய காரணமாக அமைந்தது.

ஏற்கனவே இந்த இராணுவ ஆட்சி உத்தரவு தொடர்பான மற்றொரு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் யூன், தற்போது கிளர்ச்சியைத் திட்டமிட்டதற்காக இந்த கடுமையான தண்டனையைப் பெற்றுள்ளார்.

அவர் மீது இன்னும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது அவர் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் அமைதியாக இருந்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள், தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். "கொரியா சீர்குலைந்துவிட்டது" என்று அவர்கள் கோஷமிட்டனர்.

தன்னுடைய இராணுவ ஆட்சி முயற்சி என்பது எதிர்க்கட்சியினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கான ஒரு எளிய நடவடிக்கை மட்டுமே என்று யூன் வாதிட்டார். ஆனால், தென் கொரியாவின் ஜனநாயகத்தை அவர் அடிப்படை ரீதியாகச் சிதைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவரது வாதத்தை நிராகரித்து இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யூன் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், இது உச்ச நீதிமன்றம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் குழப்பம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு தென் கொரிய மக்களை இருவேறு துருவங்களாகப் பிரித்து, நாட்டை ஒரு ஆழமான பிளவு நிலைக்குத் தள்ளியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!