சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: எதிர்ப்பால் வெளிநடப்பு செய்த ஈரான் பிரதிநிதிகள்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட சர்ச்சையால் ஈரான் பிரதிநிதிகள் தற்காலிகமாக வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 14 அம்ச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.
அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஈரானால் ஆதரிக்கப்படும் அமைப்புகள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை அரங்கில் இருந்து வெளியேறியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்காவின் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் திறன் தங்களது ஆயுதப் படைகளுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
எனினும், ஈரான் குழு தற்காலிகமாக வெளியேறிய பின்னர் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடர்ந்ததாக அமெரிக்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. முதல் சுற்று பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையில், லெபனானில் நடந்த தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பதற்றமும் பேச்சுவார்த்தைக்கு சவாலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் விதிகளை அமெரிக்கா பின்பற்றவில்லை என்றால் உடன்படிக்கை பாதிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அதேவேளை, ஹார்முஸ் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.