ரஷியாவில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50-க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷியா – உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மேற்கொண்டதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதல்களில் ரஷியாவில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷியாவின் முக்கிய இராணுவ மற்றும் மூலோபாய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே அமைந்துள்ள எலெக்டிராஸ்டல் நகரிலும், உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கொடோவ்ஸ்க் நகரிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
தம்போவ் பிராந்திய ஆளுநர் யெவ்கெனி பெர்விஷோவ் வெளியிட்ட தகவலின்படி, கொடோவ்ஸ்க் நகரில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரவு வேளையில் பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு 25 பேர் காயமடைந்துள்ளனர்.
மற்றொரு தாக்குதல் எலெக்டிராஸ்டல் நகரில் இடம்பெற்றதாகவும், அதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரேய் வொரோபியோவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மாஸ்கோவின் நோகின்ஸ்க் பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றும் டிரோன் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வெளியிட்டுள்ள கருத்தில், சிறப்பு இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக அசோவ் கடல் பகுதி மற்றும் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக சொத்து வைத்திருப்பவர்கள் யார்? முதல் இடத்தில் இந்த நாட்டின் மக்கள்!
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஐந்தாவது ஆண்டாக நீடித்து வரும் நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை நிலையான தீர்வு எட்டப்படாததால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.