எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம்
இதற்கான விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 05 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (17) இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 05 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாராளுமன்ற வாரம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நாளான இன்று, ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. முற்பகல் 11.30 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய பிரதான நிகழ்ச்சியாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இதனுடன், தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்து அதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைத்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில், ஒரு விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படவுள்ளது.