சுரேஷ் சலேவின் மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி திருத்தந்தைக்கு உறவினர்கள் கடிதம்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கியுள்ள மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது குடும்ப உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இலங்கைக்கான திருத்தந்தையின் தூதுவரான ஆயரிடம் இக்கடிதத்தைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று காலை எடுக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
அதன் பின்னர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் நிறைவடைகின்றன.
இவ்வாறான பின்னணியில், சுரேஷ் சலேவின் குடும்ப உறவினர்கள் திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். சலேவின் விவகாரம் தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சில பாதிரியார்கள் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்துக்களை வெளியிட்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.