யாழ்ப்பாணத்தில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி சந்திப்பு அருகே பிப்ரவரி 10 ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி சந்திப்பு அருகே பிப்ரவரி 10 ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்த போதும், அந்த வாகனம் உத்தரவை மீறி மண்டைதீவு நோக்கி வேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தப்பிச் சென்ற வேன் குறித்து தகவல் ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரி பயணித்த ஜீப்பிற்கு வழங்கப்பட்டு, வாகனத்தை இடைமறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வேனை நிறுத்த பலமுறை முயன்ற போதும் அது தப்பிச் சென்றதால், முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்குப் பிறகும் வாகனம் நிற்கத் தவறிய நிலையில், வேனை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் காயமடைந்து யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது வாகனத்தில் இருந்த மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவும் மேற்கொண்டு வருகின்றன.