சாவகச்சேரியில் விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு; டிப்பர் ஓட்டுநர் கைது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று (21) காலை சுமார் 8.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி சென்ற டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதே விபத்திற்குக் காரணமாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் மொத்தம் நால்வர் பயணித்திருந்தனர். அதில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சாரதி மற்றும் மற்றொரு பெண் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து டிப்பர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
