செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய கண்டுபிடிப்பு: மேலும் 6 மனித என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 36ஆவது நாள் பணிகளின் போது மேலும் 6 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் 56 நாட்கள் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வின் ஒரு பகுதியாக, இன்று (18) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது ஒரு பெரியவருக்குச் சொந்தமான என்புக்கூட்டுடன், சிறியவர் ஒருவருக்குச் சொந்தமான என்புக்கூடும் உள்ளிட்ட மொத்தம் 6 மனித என்புக்கூடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்புக்கூடுகளில் 5 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளின் போது வெள்ளை நிற பாசிமணி, இரும்புத் துண்டு மற்றும் வளையல் உள்ளிட்ட பொருட்களும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
மேலும், மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் ஒரு மண்டையோடு வழக்கத்திற்கு மாறான நிலையில் காணப்பட்டதால், அதனை கவனமாகச் சுத்தம் செய்து ஆய்வு செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை உள்ளடக்கி இதுவரை மொத்தம் 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 437 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 428 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.