யாழ்–கொழும்பு தொடருந்தில் மோதி 29 வயது பெண் உயிரிழப்பு: பாதுகாப்பற்ற கடவை குறித்து மக்கள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தொடருந்து மோதியதில் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சாலியபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், இரண்டு பிள்ளைகளின் தாயாகவும் சாலியபுரம் பகுதியைச் சேர்ந்தவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துக்கு முன்னர், அவர் அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தனது சுயதொழில் செயல்பாடுகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
விபத்து நிகழ்ந்த இடம் பாதுகாப்பற்ற கடவையாக இருப்பதுடன், அங்கு தடுப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் காவலர் பணியிலும் யாரும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தொடருந்து தண்டவாளம் வளைந்து செல்லும் அமைப்பில் இருப்பதால் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தில் நுழையும் வரை இருபுறமும் வரும் ரயில்களை காண முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையால் ஏற்கனவே ஆபத்தான பகுதியாக இருக்கும் இந்த கடவையில் கூடுதல் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான உயிரிழப்புகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.