பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு
ஜானகி அம்மா, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்புக் காரணமாக நேற்று (11) காலமானனார் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
88 வயதான இவர் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தற்போது அவரது மறைவு கோடிக்கணக்கான இசை ரசிகர்களையும் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும், ஆரா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை ஜானகி அம்மா பாடியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.
ஜானகி அம்மா, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். ஒரே மகனின் மறைவு, ஜானகி அம்மாவை மன ரீதியாகப் பெருமளவில் பாதித்தது. அந்தத் துயரத்தோடு சேர்ந்து வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவும் அவரைத் தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
ஜானகி அம்மாவின் உடலுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காகப் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை முதல் ஜானகி அம்மாவின் உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இந்திய இசைத் துறைக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பைப் போற்றும் விதமாக, ஜானகி அம்மாவின் உடல் முழு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாடகி எஸ். ஜானகி அம்மா, நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.