புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் டிஜிட்டல் வசதிகள்: அரசாங்கத்தின் புதிய திட்டம்
இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் நெகிழ்வான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைவருக்கும் பொதுவான திட்டமாக இல்லாது, தொழிலாளர்களின் வேலைக்காலம் மற்றும் வருமான நிலைகளுக்கு ஏற்ப நன்மைகள் வடிவமைக்கப்படும்.
ஓய்வு பெற்ற பிறகு மாதாந்த ஓய்வூதியம் அல்லது முதிர்ச்சியடைந்ததும் ஒரே முறையிலான மொத்தத் தொகை ஆகியவற்றில் ஒன்றைத் தொழிலாளர்கள் தேர்வு செய்யலாம்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பிய பணத்துக்கான உத்தியோகபூர்வ அறிக்கைகளை உருவாக்க ஒரு புதிய டிஜிட்டல் செயலி அறிமுகப்படுத்தப்படும். இந்த உத்தியோகபூர்வ பதிவுகள், ஓய்வூதிய நன்மைகளை வெளிப்படையான முறையில் கணக்கிடப் பயன்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்திற்காக 2.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் இத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுமார் 1.7 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். 2025ஆம் ஆண்டில் இலங்கை தனது வரலாற்றில் அதிகளவிலான வெளிநாட்டு வருமானத்தைப் பதிவு செய்த போதிலும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் வெறும் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நலன்புரித் திட்டம் ஒரு தன்னார்வத் திட்டமாக அமையும். இது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்க மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப்படும்.