புலம்பெயர் தொழிலாளர் பணம் அனுப்புதலில் திடீர் சரிவு: ஜூன் மாதத்தில் 152 மில்லியன் டொலர் குறைவு!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பணம் அனுப்புதல்கள் மூலம் 2026 ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மே மாதத்தில் 847 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணம் அனுப்புதல்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அந்த வருவாய் 152 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
இருப்பினும், 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய மொத்த பணம் அனுப்புதல்கள் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 23.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 2026 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டியுள்ளது.
எனினும், 2025 ஜூன் மாதத்தில் சுற்றுலா வருவாய் 169.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்ததால், இந்த ஆண்டு ஜூன் மாத சுற்றுலா வருவாயும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்திருப்பதாக மத்திய வங்கியின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.